Thursday, June 23, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 12

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 12
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 12

_________________________________________________________

1. பொருளின் அமைப்பு  (தொடர்ச்சி ...)
[இயற்பியல் மற்றும் வேதியியல் பதிவுகளைத் தமிழ்ப்பொழிலில் தொடர்ந்து எழுதிவருகிறார் தமிழறிஞர் அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்.  பொருளின் அமைப்பு என்ற தலைப்பில் அவர் வழங்கும் தொடர்கட்டுரையின் இப்பகுதியில், அணுக்களின் அமைப்பு, தனிமங்களின் அணுவெண், தனிமங்களின்  அணுவின் பலஅடுக்கங்களில் அமைந்திருக்கும் மின்னுருக்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறித்து விளக்கம் தருகிறார், தகவலின் பட்டியலும் தரப்பட்டுள்ளது. இது ஒரு தொடர் கட்டுரை]

2. ஆழ்வார் பாரதமும் பண்டைத்தமிழ் நூல்களும்   (தொடர்ச்சி ...)
ம. வி. இராகவன்
[வில்லிபுத்தூரர்  பாரதத்தை பல்வேறு கோணங்களில் ஆராயும் ம. வி. இராகவன், இம்முறை பண்டைத்தமிழ் நூல்களுடன் ஒப்பிடுகிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் கருத்துக்களை பிற்காலப் புலவர்கள் தங்கள் படைப்புகளில் எடுத்தாள்வதும்  வழக்கமே. அவ்வாறு, வில்லிபுத்தூரர் தாம் எழுதிய  பாரதத்தில் திருக்குறள் கருத்துக்களை எடுத்தாண்ட பகுதிகளைச் சுட்டுகிறார் ம. வி. இராகவன். இக்கட்டுரை  நிறைவுற்றது]

3. தமிழ்மொழி அம்மானை
[பத்து வரிகள் கொண்ட பாடலொன்று, எழுதியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை]

4. சேக்கிழாரும் கம்பரும்
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[முன்னர் கம்பராமாயணத்தின் உவமைகளைப் பாராட்டி எழுதிய R. P. அமிர்தலிங்கம் பிள்ளை, இம்முறை சேக்கிழார் மற்றும் கம்பரின் இலக்கியத் திறனை ஒப்பிட்டும், அவர்களது படைப்புகளான பெரியபுராணம் மற்றும் கம்பராமாயணம் ஆகிய இலக்கியங்களில் காணப்படும் ஒற்றுமைகளைக் குறித்தும்  ஒப்பிலக்கிய ஆய்வுக் கட்டுரை ஒன்றினை வழங்கியுள்ளார். 
தாங்கள் எடுத்துக்கொண்ட  கதைக்கேற்றவாறு கதையின் பாத்திரங்களின் வழியாக அடியார் உள்ளத்தின் ஆண்டானடிமை திறத்தையும், மக்கள் உள்ளத்தின் நல்லொழுக்கத்தையும் உணர்த்திய இருவரும் சிறந்த புலவர்கள்  எனக் கூறுகிறார் அமிர்தலிங்கம் பிள்ளை. 
இருவரின் கடவுள் வாழ்த்துப் பாடல்களும் 'உலகம்'  (உலகெலாம் உணர்ந்து, உலகம் யாவையும்) என்ற மங்கல மொழியால் தொடங்கும்  நாற்சீரடி நான்கு கலிவிருத்தமாக அமைந்திருப்பது; இருவரும் தங்கள் படைப்பை  'மாக்கதை' எனக் கூறியிருத்தல்; திருமுனைப்பாடி, மிதிலை நகரின் சிறப்புக்களை கூறிய விதம் எனப் பல ஒற்றுமைகளைக் காட்டி தன் கருத்துக்களை முன்வைக்கிறார்]

5. சோழன் கரிகால் வளவன் - நாடகம் (தொடர்ச்சி ...)
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[தமிழ்ப்பொழிலில் தமிழக மன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால் இம்முறை சோழன் கரிகால் வளவனின்  வாழ்க்கை வரலாறு  நாடக வடிவில் வழங்கப்படுகிறது.
நாடகத்தின் இப்பகுதியில், பெரியோர்கள் வாழ்த்த,  நாங்கூர் வேள் மகள் நங்கையைக் கரிகால் வளவன் திருமணம் புரியும் காட்சியுடன் இத்தொடர் நாடகம் நிறைவுறுகிறது. இந்த நாடகம் கரந்தைத் தமிழ்ச்  சங்கக் கல்லூரியின் ஆண்டு விழாவில் மாணவர்களால் நடித்துக் காட்டப்பட்டது]

6. நாகை. திரு. தண்டபாணி தேசிகர் 'சங்கர நமசிவாயர் உரை பொருந்துமாறு' என்னும் உரைபற்றிய திருமுகம்
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[பொழிலின் ஆசிரியருக்கு ஓர் கடிதம்; நாகை. திரு. தண்டபாணி தேசிகர் 'சங்கர நமசிவாயர் உரை பொருந்துமாறு' என்ற கட்டுரைக்கு மறுப்பெழுதி திசை திருப்புவோரை கருத்தில் கொள்ளாமல், கட்டுரை ஆசிரியர் விரைவில் கட்டுரையை முடிக்குமாறு வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ளார் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் (இவர் முன்னர் பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரை கட்டுரை திசை மாறுதல் குறித்தும்  இது போன்ற வேண்டுகோள் மடல் எழுதியவர் என்பதும் நினைவிருக்கலாம் - http://thfreferencelibrary.blogspot.com/2016/05/1932-1933-8-7.html)]

7. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  அத்துடன், நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின்  தொல்காப்பிய உரையை ஆதரித்து   நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார்.  அதற்கான  மறுப்பின் தொடர்ச்சி ... பத்தாவது பிழை குறித்த விளக்கம் ... கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ...]

8. தமிழ்ச் செய்திகள் பகுதி
இதழாசிரியர்
உ.வே. சா. அவர்களின் 80 ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது  என்ற செய்தி கொடுக்கப்பட்டுள்ளது.
'இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண்' என்ற குறள் நெறிப்படி செயலாற்றும் உ.வே. சா.  அவர்களுக்குப் பாராட்டும் வழங்கப்பட்டுள்ளது.

9. மதிப்புரை
["ஈழ கேசரி" என்ற பெயரில்  யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் தமிழ் வாரஇதழின் தமிழ்ப்பணி குறித்துப் பாராட்டுரை;
சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீயம் காவியத்தை உரைநடைவடிவ நாடகமாக எழுதிய பச்சையப்பன் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் ம. சண்முகசுந்தர முதலியார் அவர்களின் நூலுக்குப் பாராட்டுரை;
அபிமன்யு என்ற தலைப்பில் வெங்களத்தூர் சாமிநாதசர்மா அவர்கள் எழுதிய நாடக  நூலில் அளவுக்குமீறிய வடமொழி சொற்களின் கலப்பால் அந்நூல் பொலிவிழந்துள்ளது என்றக் கருத்துரை;
சைவ எல்லப்ப நாவலர் அவர்களின் 'திருவருணைக்கலம்பகம்' என்ற நூலையும், அதற்கு நா. இராமலிங்கம் பிள்ளை எழுதிய விளக்க உரையையும்  நாலாகப் பதிப்பித்தளித்த  காழி. சிவ. கண்ணுசாமிப் பிள்ளை அவர்களுக்கு நன்றியுரையும் வழங்கப்பட்டுள்ளது]

10. கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரியின் ஆண்டுவிழா, கல்லூரியின் 18 ஆண்டின் அறிக்கை
சிவ. குப்புசாமி
[கல்லூரியின் ஆண்டுவிழா நிகழ்வுகள்;  கல்லூரியின் செயல்கள் பற்றிய ஆண்டறிக்கை; அந்த ஆண்டில்  கல்லூரிக்கு வருகை தந்த சென்னை மாநில அரசியல் அமைச்சர்கள் போன்ற தகவல்கள் இப்பகுதியில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment