Sunday, December 18, 2016

தமிழ்ப் பொழில் (1937-1938) துணர்: 13 - மலர்: 1

வணக்கம்.

துணர்: 13 - மலர்: 1  (1937-1938) வெளியீடான  தமிழ்ப் பொழில் இதழ்,
மின்னிதழாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பதின்மூன்றாம் ஆண்டு: (1937-1938)   துணர்: 13 - மலர்: 1

________________________________________________________________

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

1. தென்பாண்டி நாடும் -- கொற்கை மாநகரமும் - சி. கு. நாராயணசாமி முதலியார்
2. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...) - ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
3. தில்லையுலா - L. உலகநாத பிள்ளை
4. வடநாடு சென்ற தமிழரசர் காலம் - மா. இராசமாணிக்கம்
5. தமிழ்ச் செய்திகள் - இதழாசிரியர்
6. நூல் மதிப்புரை -  இதழாசிரியர்
7. கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணிகளுக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம் -  இதழாசிரியர்

வாசிக்க இங்கே செல்க!


நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
________________________________________________

விரிவான உள்ளடக்கம் ...

1. தென்பாண்டி நாடும் -- கொற்கை மாநகரமும்
சி. கு. நாராயணசாமி முதலியார்
[பாண்டிய மன்னர்களின் "கொற்கையம் பெருந்துறை"  என்றழைக்கப் பட்ட சிறப்புமிக்க  துறைமுகமாகவும் மற்றொரு  தலைநகராகவும்  விளங்கிய  "கொற்கை மாநகர்" குறித்த வரலாற்றுத் தகவல்களும், கொற்கையை ஆண்ட பாண்டிய  மன்னர்கள், கொற்கையின் முத்துக்கள்  குறித்து சங்க இலக்கியங்கள் முதல் குமரகுருபரர் வரை புலவர்கள் பாடிச்சென்ற செய்திகளையும், அயல்நாட்டு நூல்கள் தரும் செய்திகளையும் தொகுத்து வழங்குகிறார் நாராயணசாமி முதலியார்.  இது ஒரு தொடர் கட்டுரை].

2. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  அத்துடன், நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின்  தொல்காப்பிய உரையை ஆதரித்து   நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார்.  அதற்கான  மறுப்பின் தொடர்ச்சி ... இது ஒரு தொடர் கட்டுரை].

3. தில்லையுலா (தொடர்ச்சி ...)
L. உலகநாத பிள்ளை
[தில்லை நடராஜரின் திருவீதி உலாவில் ஆடலரசனைக் கண்டு ஏழுவகை  வயத்துப்பிரிவு மகளிரும் சிவன் மீது கொண்ட காதலை விளக்கும், பிரபந்த வகைகளில் ஒன்றான உலா பாடல்கள்.  ஆசிரியர் பெயர் அறியக்கூடவில்லை.  வேறுபிரதிகளும் ஒப்புநோக்கக் கிடைக்காத பொழுது, கிடைத்த பாடல்கள் செல்லரித்துப் போகும் முன்னர் பாதுகாக்கும் நோக்கில் இதுவரை அச்சில் ஏறாத இந்த தில்லையுலா பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது, இப்பகுதி தொடரும்]

4. வடநாடு சென்ற தமிழரசர் காலம்
மா. இராசமாணிக்கம்
[கரிகால் சோழன், நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகிய தமிழ் மன்னர்கள்  ஆரிய மன்னரை வென்று மீண்டதாகத் தமிழிலக்கியங்கள் கூறுகின்றன.  இவர்கள் வடநாடு சென்றிருந்தால் அவர்கள் சென்ற காலம் எதுவாக இருக்கலாம் என ஆராய முற்படுகிறார் கட்டுரை ஆசிரியர்.  வரலாற்றுச் செய்திகளின் அடிப்படையில் சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்ற காலம் கி.பி. 166-193 க்கு இடைப்பட்டக் காலமாக இருத்தல் வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். இது ஒரு தொடர் கட்டுரை].

5. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[- 13 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ்ப்பொழில் அதன் வளர்ச்சிக்கு உதவிய எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி கூறுகிறது
- 1937 ஆண்டின் கரந்தைத் தமிழ்ச் சங்கத்து ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது, வரவிருக்கும் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் குறித்த திட்டங்கள் விவாதத்தில் உள்ளது
- 1937 ஏப்ரல் 6, 7, 8 இல் தஞ்சையில் நடந்த அறிஞர்கள் மாநாட்டில், "காங்கிரஸ் கட்சி அரசியல் தலைவரின்" தலைமையில், இந்தியைத் தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டு மாணவர்களுக்குக் கட்டாயப் பாடமாக்கி கற்பிக்க எடுத்த முடிவை கரந்தைத் தமிழ்ச் சங்கம் எதிர்க்கிறது.    இந்தியாவில் கற்றோர் எண்ணிக்கை 10% என்பதையும் குறிப்பிட்டு, இம்முடிவு தமிழகத்தின்  கல்வி வளர்ச்சிக்கு இடையூறு என்று கூறி, அரசியல் தலைவரின் பேதைமையையும், தமிழரின் அடிமை மனப்பான்மையையும் கண்டிக்கிறது].

6.   நூல் மதிப்புரை
இதழாசிரியர்
[- ஈழகேசரி வாரஇதழ் தமது தமிழ் வளர்சிப்பணியின் மற்றொரு முயற்சியாக வெளியிட்டுள்ள "ஆண்டு மடல்" இதழின் சிறப்பு பாராட்டப்படுகிறது
- சி. வை. தாமோதரம்பிள்ளை நினைவாக, ஈழகேசரியின் ஆசிரியர் நா. பொன்னையா அவர்கள்  வெளியிட்டுள்ள "தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மூலமும், நச்சினார்க்கினியர் உரையும்" பதிப்பு பாராட்டப்பட்டுள்ளது].

7. கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணிகளுக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.
இதழாசிரியர்
[கரந்தைத் தமிழ்ச் சங்க அமைப்பின் கல்லூரி, மருத்துவசாலை, வெள்ளிவிழா திட்டங்களுக்கு நன்கொடை அளித்தோர்  பெயர், நன்கொடைத் தொகை குறிப்பிடப்பட்டு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது].
________________________________________________

Thursday, December 1, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 12

வணக்கம்.

துணர்: 12 - மலர்: 12  (1936-1937) வெளியீடான  தமிழ்ப் பொழில் இதழ்,
மின்னிதழாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)   துணர்: 12 - மலர்: 12

________________________________________________________________

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

1. நன்னனும் பரணரும், (தொடர்ச்சி ...) - ஔவை சு. துரைசாமிப்பிள்ளை.
2. கல்லாட நூலாராய்ச்சி (தொடர்ச்சி ...) - E.R. நரசிம்மஐயங்கார்
3. தில்லையுலா - L. உலகநாத பிள்ளை
4. கடிமர யானை - சிறு நாடகம் - கு. நா. சுந்தரேசன்
5.  நூல் மதிப்புரை - இதழாசிரியர்
6. தமிழ்ச் செய்திகள் - இதழாசிரியர்
7. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.
8. நூல்: சித்தரந்தாதி - மூலமும் உரையும் (இணைப்பு)
9. நூல்: நெல்லை வருக்கக் கோவை (இணைப்பு)

வாசிக்க இங்கே செல்க!

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
________________________________________________

விரிவான உள்ளடக்கம் ...
1. நன்னனும் பரணரும் (தொடர்ச்சி ...)
ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
[நன்னன் என்பவன், சேரன் செங்குட்டுவன்  காலத்திற்குச் சற்றே பிற்காலத்தில், சேரநாட்டின் ஒரு  குறுநிலப்பகுதியான கொங்குப் பகுதியை  ஆட்சி செய்த வேளிர் குல மன்னன்.

கட்டுரையின் இப்பகுதியில் நன்னனின் நகரங்களுள் ஒன்றான ஆஅய் பிரம்பு குறித்த அகநானூற்றுப் பாடல் (356), பாழி நகரம் குறித்த அகநானூற்றுப் பாடல்கள் (258, 372), நன்னன் வேந்தர் பலரை வென்று, அவர் மகளிர் கூந்தலை கயிறாகத் திரித்து அருங்கலம் கொணர்ந்ததைக் கூறும் நற்றிணை பாடல் (270), அவன் பெண்கொலை செய்து தீராப்பழியைப் பெற்றதைக் கூறும் குறுந்தொகைப் பாடல் (292), படைத்தலைவன் மிஞிலி யின் தந்தையின் கண்களைக் குருடாக்கிய கோசர்களை வென்றதைக் கூறும் குறுந்தொகைப் பாடல் (73), ஆகிய பரணரின் பாடல்கள் வழி நன்னனது வரலாற்றைக் கூறுகிறார் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை].

2. கல்லாட நூலாராய்ச்சி (தொடர்ச்சி ...)
E.R. நரசிம்மஐயங்கார்
[அரிகேசரி என்னும் கூன்பாண்டியனின் குறிப்பு,  மலைநாடென சேரநாட்டுப் பகுதியைக் குறிக்கும் சொல் பயன்பாடு,  கோவிலில் கல்மதில் அமைப்புகள்  எழுப்பப்பட்ட காலம், தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் பற்றிய குறிப்பு, கிரந்த எழுத்துக்கள் பற்றிய செய்தி, தன்மைப்பெயர்கள் பயன்பாடு, வடமொழிச்சொற்கள் பயின்று வருதல் ஆகிய பற்பல இலக்கியக் குறிப்புகளை எடுத்துக்காட்டி திருவிளையாடல் கதைகள் காலந்தோறும் தோன்றின.  வடமொழியில் தொகுக்கப்பட்ட திருவிளையாடல் நூலும், கல்லாடமும் 11 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நூல்களல்ல என்றும், மாணிக்க வாசகர் 9 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவரல்லர் என்றும், கல்லாடம் 6 ஆம் நூற்றாண்டு நூல் எனக் கருதுவது தவறு எனவும் விளக்குகிறார் நரசிம்மஐயங்கார்]

3. தில்லையுலா
L. உலகநாத பிள்ளை
[தில்லை நடராஜரின் திருவீதி உலாவில் ஆடலரசனைக் கண்டு ஏழுவகை  வயத்துப்பிரிவு மகளிரும் சிவன் மீது கொண்ட காதலை விளக்கும், பிரபந்த வகைகளில் ஒன்றான உலா பாடல்கள்.  ஆசிரியர் பெயர் அறியக்கூடவில்லை.  வேறுபிரதிகளும் ஒப்புநோக்கக் கிடைக்காத பொழுது, கிடைத்த பாடல்கள் செல்லரித்துப் போகும் முன்னர் பாதுகாக்கும் நோக்கில் இதுவரை அச்சில் ஏறாத இந்த தில்லையுலா பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது, இப்பகுதி தொடரும்]

4. கடிமர யானை - சிறு நாடகம்
கு. நா. சுந்தரேசன்
[இரவலர் அளித்த பரிசில்! (பாடல் 162) என்ற புறநானூற்றுப் பாடலினை அடிப்படையாக் கொண்டு எழுதப்பட்ட நாடகம். புலவர்  பெருஞ்சித்திரனார், தனது தகுதிக்கேற்ற பரிசு கொடுக்கத் தவறிய இளவெளிமான் தந்த பரிசிலைப் புறக்கணித்து வள்ளல்  குமணனிடம் சென்று பாடி பரிசில் பெறுகிறார்.  இளவெளிமானின் நாட்டுக்குத் திரும்பி குமணன் தனக்கு வழங்கிய கொடையான யானையை   இளவெளிமானின்  காவல் மரத்தில் (கடிமரம் = காவல் மரம்)  கட்டி அதனைத் தனது பரிசாக  இளவெளிமானுக்கு அளித்து  'நின்ஊர்க் கடிமரம் வருந்தத் தந்துயாம் பிணித்த நெடுநல் யானைஎம் பரிசில்' எனக் கூறி புத்தி புகட்டிய நிகழ்வு  நாடக வடிவெடுத்துள்ளது]

5.  நூல் மதிப்புரை
இதழாசிரியர்
[சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட, இராவ் சாகேப் வெ. ப. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் எழுதிய  'கம்பராமாயணம் - பாலகாண்டம்' உரைநூல் மதிப்புரை பெற்றுள்ளது]

6. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழறிஞர்  C. R. நமசிவாய முதலியார் படத்திறப்பு விழா நடைபெற்றது. பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் தமிழ்ப் புலவர்களை பிற பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களை (Lecturer) அழைப்பது போலவே 'சொற்பொழிவாளர்' எனக் குறிப்பிட வேண்டும் என்றும் அவர்கள் ஊதியமும் அவர்களுக்கு இணையாக வழங்கப் பட வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கை ஆட்சிக் குழுவினரால் (இலட்சுமணசாமி முதலியார் முன்வைத்த விளக்கத்தினை ஏற்றுக் கொண்டு) நிராகரிக்கப்பட்டது.

7. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

8. நூல்: சித்தரந்தாதி - மூலமும் உரையும்
ஆசிரியர்: சித்தர்
வெளியீடு: தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்து வெளியீடு - 12
பதிப்பகம்: கூட்டுறவுப் பதிப்பகம், தஞ்சை
ஆண்டு: 1936
பக்கங்கள்: 14
நூல் அறிமுகம்:
இந்த நூல் திருவானைக்காவல் கோயில் நாயகியான அகிலாண்ட அம்மையின் மீது எழுதப்பட்ட தோத்திரப்பாடல்களாக, கலித்துறையால் அமைந்த 22 பாடல்களைக் கொண்டமைந்துள்ளது. இந்த நூலை எழுதிய சித்தரின் ஊர், மரபு முதலிய வரலாறோ, இப்பாடலுக்கு உரை எழுதியவர் வரலாறோ அறியக்கூடவில்லை. இதனை செம்பரம்பாக்கம் கறுப்ப முதலியார் மகன் ஆறுமுகம் என்பவர் ஏடுகளில் எழுதி வைத்தார் என்ற குறிப்பு மட்டும் கிடைத்துள்ளது.

தஞ்சை சரபோஜி மன்னரின் சரசுவதிமகால் நூலகத்தின் இந்த நூல், பக்கத்திற்கு 5 வரிகளாக 20 ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு, நூலகத்தின் 129 ஆவது எண் கொண்ட ஓலைச்சுவடியென இடம் பெற்றுள்ளது. தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாக 1936 ஆண்டில்  இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த தமிழ்ப் பொழில் இதழில் இது ஒரு இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 

9. நூல்: நெல்லை வருக்கக் கோவை
ஆசிரியர்: அம்பிகாபதி
வெளியீடு: தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்து வெளியீடு - 11
பதிப்பகம்: கூட்டுறவுப் பதிப்பகம், தஞ்சை
ஆண்டு: 1936
பக்கங்கள்: 20
நூல் அறிமுகம்:
இந்த நூல் "நெல்லைமாலை" என்றும் அழைக்கப்படும். திருநெல்வேலியில் கோயில் கொண்டுள்ள நெல்லைநாதர் இந்த நூலின் பாட்டுடைத் தலைவர். அகப்பொருளில், மொழியின் முதலாம் வருக்க எழுத்துக்கள் ஒவ்வொரு காரிகையின் முதலெழுத்தாய் அமையுமாறு தொடுக்கப்பட்ட செய்யுள்களைக் கொண்டமைந்துள்ளது இதன் சிறப்பு, 98 செய்யுள்களில் கதை சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. நூலின் ஆசிரியர் பாண்டிய நாட்டின் வீரையில் (வேம்பத்தூரில்) ஒரு வேதியர் குலத்தில் பிறந்தவர் என்பதை இந்நூலின் கடைசிச் செய்யுள் கூறுகிறது.

தஞ்சை சரபோஜி மன்னரின் சரசுவதிமகால் நூலகத்தின் இந்த நூல், பிழை திருத்தப்பட்டு செப்பனிடப்பட்டு, தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாக 1936 ஆண்டில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த தமிழ்ப் பொழில் இதழில் இது ஒரு இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 
________________________________________________