Thursday, March 26, 2015

நாடார் குல மித்திரன் - 1922 - டிசம்பர் மாதத்தின் 2 வது இதழ்



வணக்கம்.

நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை 1922ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மாதம் மும்முறையாக (1, 11, 21 ஆம் தேதிகளில்) மூன்று  வெளியீடுகள் வெளிவந்துள்ளன.


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
இதழ் மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில்:

  • காந்தியின் தலைமையில் நடந்த ஒத்துழையாமை இயக்க கால செய்தியொன்று, புதிதாய் வந்த சட்ட சீர்திருத்தம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லாத காரணத்தினால் சட்டசபையைப் புறக்கணிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்தப் புறக்கணிப்பினால் விளையக்கூடிய நன்மை தீமைகளை ஒரு கட்டுரை ஆராய்கிறது.
  • கடைசிபக்கக் கட்டுரை ஒன்றில் மதுரையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஆலயப்பிரவேசம் பற்றிய விவாதங்களில் "தமிழ்நாடு" பத்திரிக்கையின் வரதராஜுலு நாயுடு  அவர்கள் அதிகம் கண்டிக்கப்பட்டதில், அவர் அதை மறுத்து, உண்மை தெரியாமல் சில  பத்திரிக்கைகள் தவறான கருத்துகளை ஒரு  சில பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன என்று குறிப்பிட்டு அவ்வாறு  எழுதுவதை நிறுத்தும்படி கண்டனம் தெரிவித்து, தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அவற்றில் நாடார் குல மித்திரனும் ஒன்று. சாதிச்சண்டைகள்  வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.  தமிழ்நாடு பத்திரிகையில் அவர் எழுதிய மறுப்புச் செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.
  • "நன்மை கடைபிடி" என்ற கட்டுரை   குடியினால் விளையும் தீமைகளைக் கருத்தில் கொண்டு நாடார்களை பனைமரக்கள்  இறக்கும் தொழிலை கைவிட வேண்டுகிறது. மாற்றாக, பதநீர் அல்லது பனைவெல்லம் தொழிலோ அல்லது மாற்றுத் தொழில் பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டுகிறது.  சாத்தூரில் கூடிய நாடார்குல ஏழாவது மாநாட்டில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்தையும்  நினைவுறுத்துகிறது
  • சென்ற இதழில் குறிப்பிடப்பட்ட பொறியாளர் தேவாரம் நாடார் அவர்களைச்  சந்தித்து "நாடார் மேனுபாக்ச்சரிங் கம்பெனி" ஒன்றை இரண்டு லட்சம் செலவில் தொடங்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்டுவது தெரிகிறது.  நாடார் குலத்திற்கு மாற்றுத் தொழில் வழிகாட்ட இந்த முனைப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் குல மக்களின் வாழ்வாதாரத்திற்கென பத்திரிக்கை ஆசிரியர் காட்டும் அக்கறை பராட்டிற்குரியதாகக் கருதப்பட வேண்டியதொன்று. இது போன்ற தொழில் தகவல்கள மூன்று நான்கு கட்டுரைகளில் இடம்பெறுகின்றன.
  • சங்கச் செய்திகள்: நாடார்கள் பள்ளிகள் துவக்கினால் நாடார்குல சங்கம் பொருளுதவி செய்ய முடிவு செய்துள்ள தகவலும், மேலும் பல சங்க நடவடிக்கைகளும் வழக்கம் போல கொடுக்கப்பட்டுள்ளன.
  • கவனத்தைக் கவரும் துணுக்குகள் சில: டிசம்பர்  1, 1922 கனத்த மழையினால் வைகையில் வெள்ளம் ஏற்பட்டு மதுரை வெள்ள சேதத்தை அடைந்திருக்கிறது. இதில் உயிர்ச் சேதங்களும் அடங்கும்.
  • மூளையின் நிறைக்கேற்ப புத்திசாலித்தனம் என்று கூறுவார் என்று குறிப்பிட்டு ஒவ்வொரு நாட்டு மக்களின் மூளை நிறையை பட்டியலிடும் துணுக்கு  ஒன்றில் ஸ்காட்லான்ட் நாட்டினர் 50 அவுன்ஸ் மூளை நிறையுடன் முன்னணியிலும்,  எஸ்கிமோ மக்கள் 44 அவுன்ஸ் நிறை கொண்ட மூளையுடன் கடைசியிலும் உள்ளனர். இந்துக்களின் மூளை நிறை 45  அவுன்ஸ் என்றும் 12 இனத்தவர்கள் இடம் பெற்ற  பட்டியலில் இந்துக்கள்  9 ஆம் இடத்தில் தரவரிசையில் இடம் பிடித்துள்ளனர்.  மேலும், கடைசி பக்கத்தின் "உலக விநோதங்கள்" பகுதி மேலும் பல சுவையான தகவல்களைக் கொண்டுள்ளன
  • மகளிர் பற்றிய தகவல்கள்: லண்டனில் மகளிர்  9 பேர் வழக்கறிஞர் தொழிலில் முதன் முதலில் நுழைந்துள்ளனர். சென்னை  சைதாப்பேட்டையில் லக்ஷ்மண அய்யர் என்ற பேராசிரியரின் மனைவி சுப்புலக்ஷ்மியும், சாரங்கபாணி நாயுடு என்ற வணிகரின் மனைவி கிருஷ்ணம்மாளும் முனிசிபல் கமிஷனர்களாக செங்கல்பட்டு மாவட்ட ஆளுநர் ஆணையின் படி  பதவியேற்றனர்.
  • தொடர்கள்:  ஸ்ரீ கிருஷ்ணலீலை தொடர்கிறது. தியாகராஜன் அல்லது திறமையுள்ள ஓர் வாலிபன் என்ற தொடர்கதையின் நான்காம் பாகம் இடம் பெற்றுள்ளது.
  • விளம்பரங்கள்: வழக்கத்தைவிட  விளம்பரங்களின் எண்ணிக்கை குறைவாகவே இந்த இதழில் காணப்படுகின்றன.  சௌந்தரகாந்தி நூல், ஆநந்தமகிளா, அமரர் புராணம் நூல்  என்ற நூல்களுக்கும்; தேசானுகூலன்  பத்திரிகை, பத்திரிக்கைக்கனா விளம்பரங்களும் உண்டு.


நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி



வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்

No comments:

Post a Comment