Saturday, March 7, 2015

நாடார் குல மித்திரன் - 1922 - நவம்பர் 2 வது இதழ்

வணக்கம்.

நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில் இன்று வெளியிடப்படுவது
1922ம் ஆண்டு நவம்பர் 11  வெளிவந்த 2 வது இதழ் (மலர் 4 - இதழ் 8).

மாதம் மும்முறையாக (1, 11, 21 ஆம் தேதிகளில்) நவம்பர்  மாதம் மூன்று  வெளியீடுகள் வெளிவந்துள்ளன.

இன்று 1922 - நவம்பர்  மாதத்தின் இரண்டாவது  இதழாக வெளியிடப்பட்ட சஞ்சிகை மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழின் சிறப்பு:  பெரியாருடன் ஒரு நேர் காணல் - அருப்புக்கோட்டை காங்கிரஸ் மாநாட்டிற்காக வந்திருந்த காங்கிரஸ் கட்சியுன் செயலாளரான ஈ. வெ . ரா வுடன் நாடார்குல மக்களின் நேர்காணல்
(இந்த நேர்காணல் கருத்துகள் இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளது)

குலவர்த்தமானம் என்ற பகுதியில் நாடார் சங்க அறிவிப்புகள், உலக நடப்புகளைப் பற்றிய துண்டு துணுக்குகள், விகடக்கொத்து, பழமொழிகள்,  குறிப்புகளும் அபிப்பிராயங்களும் போன்ற வழக்கமான பகுதிகள் தொடர்கின்றன.

பிரிட்டிஷ் கவர்ன்மெண்டில் மாறுதல் - "நமது"*** மாஜி பிரதம மந்திரி என்று பிரிட்டிஷ் பிரதமர் "லாயிட் ஜார்ஜ்" அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள் என்ற தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சீமைப்பதிரிக்கைகள் பகுதி (6 ஆம்  பக்கத் தகவல் தரும் செய்தி), அக்காலத்திலும் ஆங்கில பத்திரிக்கைகள் உலகம் முழுவதும் அதிக விற்பனையாகும் பொழுது தமிழ் பத்திரிக்கைகளுக்கு ஆதரவு இல்லாதிருந்திருப்பது தெரிய வருகிறது.  ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் ஆசிரியர் தரும் கருத்து இன்றைய தமிழக நூல் விற்பனை நிலையையும் ஒத்திருப்பது, தமிழர்கள் எக்காலத்திலும் படிப்பதில் ஆர்வமுள்ள வாசகர்களல்ல என்பதையே காட்டுகிறது.

வழக்கமான ஸ்ரீ கிருஷ்ணலீலை பகுதியும் அதில் கண்ணன் யசோதையால்  கயிற்றால் கட்டப்படும்   கதையும் விவரிக்கப் பட்டுள்ளது (7 ஆவது பக்கம்).

தியாகராஜன் அல்லது திறமையுள்ள ஓர் வாலிபன் என்ற தொடர்கதை துவங்கியுள்ளது, ஆனால் ஆசிரியர் யார் என்ற குறிப்பு இல்லை.


விளம்பரங்கள்:
வழக்கம் போல முதல் மற்றும் கடைசி பக்கங்கள் விளம்பரங்களால் நிரம்பியும், இடையிடையே சில பக்கங்களிலும் விளம்பரங்கள் காணப்படுகின்றன. 

சௌந்தரகாந்தி நூல், மனோசுந்தரம் நூல், அமரர் புராணம் நூல்,  சங்கீத மஞ்சரி என்ற நூல்களுக்கும் ...
தேசானுகூலன்  பத்திரிகை, தத்துவ இஸ்லாம் பத்திரிகை , ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கைகளுக்கான விளம்பரங்களும் உண்டு.

பள்ளி இறுதி வகுப்பு /VI பாரம் முடித்த, ஆங்கிலம் படித்துள்ள 23 வயது வேளாளசைவ மணமகனுக்கு "அழகும் சொத்தும்" உள்ள எந்த இனத்தைச் சார்ந்த பெண்ணானாலும் தேவை என்றும், சொத்துள்ளவர்கள் 'மட்டும்' தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.


லேகிய  விற்பனை விளபரங்களுமுண்டு, ஊர்க்குருவி லேகிய விளம்பரம்  'வெண்பா' பாடலாகவும்  எழுதப்பட்டுள்ளது.




நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி



வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]




பிற இதழ்களின் தொகுப்பு: தமிழ் மரபு நூலகத்தில்


*** [தனிப்பட்ட கருத்து...இங்கிலாந்து பிரதமரை நமது பிரதமர் என்று குறிப்பிட்டுள்ளதைப் படிப்பது  சுதந்திர இந்தியாவில் பிறந்த வளர்ந்த காரணத்தினால் படிப்தற்கு  வேதனை தருவதாக  இருக்கிறது]

No comments:

Post a Comment