Thursday, September 22, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 7

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 7
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 7

_________________________________________________________

1.  திருக்குறணுதலிய நெறிமுறை (தொடர்ச்சி ...)
K. சோமசுந்தரம் பிள்ளை
[திருக்குறள் ஒழுக்க நெறியையும், அன்பையும் அறத்தையும் முதன்மைப்படுத்துகிறது என்பதை எடுத்துக் காட்டும் நோக்கில் சோமசுந்தரம் பிள்ளை    'இருமனப் பெண்டிர், பெண்வழிச்சேறல், கள், கவறுகள், இரவு, இரவச்சம்' ஆகியன  நல்வாழ்விற்குத்  தரும் இடர்களைக் குறித்து எழுதினார்.   இத்தொடர் கட்டுரையின் இப்பகுதியில்;  வாய்மை, ஈகை, உடல்நலம், பிணி, மருந்து ஆகியன குறித்து  வள்ளுவர் அறிவுறுத்தியவை விளக்கப்படுகிறது.  இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2. திருவிளையாடற் புராண வாராய்ச்சி  (தொடர்ச்சி ...)
E.R. நரசிம்ம ஐயங்கார்
[பெரும் பற்றப்புலியூர் நம்பியார் மற்றும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராண நூல்கள் அகச்சான்றுகள் இல்லாத நூல்களென்பதும்,  அதனால் காலவரையறுக்க உதவும் குறிப்புகளற்ற நூல்களென்பதும் அறிஞர் முடிபு.   இது தவறான கருத்து என இக்கட்டுரையின் வழி  காட்ட விரும்புவது  நரசிம்ம ஐயங்கார் அவர்களின் நோக்கம்.
பெரும் பற்றப்புலியூர் நம்பியார் மற்றும் பரஞ்சோதி முனிவர் இருவருமே 13 ஆம் நூற்றாண்டினர்  என அவர்கள்  தனது  பாடலில் கையாண்ட  குறிப்புகள் காட்டுவதாகவும் கூறுகிறார். பெரும் பற்றப்புலியூர் நம்பியார் நூலில் சேக்கிழார் மற்றும் பரஞ்சோதி முனிவர் கருத்துகள் இடம் பெறுவதாகவும் கூறுகிறார்]

3. இயைபு நூல்  (தொடர்ச்சி ...)
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[பொருளின் அமைப்பு   என்ற தலைப்பில் கட்டுரை எழுதி வந்த   அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார் அவர்கள், 'இயைபுநூல்' என்ற  தலைப்பில் தொடர்கிறார்.
2. இயன் மாற்றமும் நிறையும்  - என்ற அத்தியாயத்தில்: பொருண்மையும் நிறையும், இயன்மாற்றத்தில் நிறைமாற்றம், நிலவியம், இயன் மாற்றத்திற்குக் காரணம், இயன் மாற்றத்தின் சிறப்பியல்புகள்  ஆகியவற்றைக் குறித்து விளக்கம் தருகிறார், இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

4. கருவிலே வாய்த்த திரு
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[மக்களின் செயல்பாடுகள் பலவகை; தாமே திட்டமிட்டு அடுத்தவர் உதவியின்றி செயல்படுத்துதல், அடுத்தவர் உதவியுடன் செயலாற்றல், பிறர் ஏவி வழி காட்டிய பின்னர் முடித்தல் என வகைப்படுத்தலாம்.  தாமே கூர்த்த மதியுடன் திட்டமிட்டு செயல்படுத்திக் காட்டுபவரின் திறமையின் சிறப்பியல்பினை  அவருக்கு அது 'கருவிலேயே வாய்க்கப்பட்ட திரு'  எனலாம் என்பது ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களது கருத்து. இக்கருத்தை விளக்க, பறவைகளிடம் இயற்கையில் அமையப் பெற்ற நுண்ணறிவுத் திறன் கொண்ட செயல்களைச் சுட்டிக்  காட்டி விளக்குகிறார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை ]

5. காலவாராய்ச்சி
ம.வி. இராகவன்
[III. பண்டைப் பெருமக்கள் வாழ்ந்த காலவாராய்ச்சி செய்வது குறித்து விளக்குவது கட்டுரை  ஆசிரியரின் நோக்கம்.  தமிழக இலக்கியங்கள் காலவாராய்ச்சி செய்வதற்கு போதிய சான்றுகள் தருவதில்லை என்பது இவர் கருத்து.  இக்கோணத்தில் தமிழ்ப்பொழிலில் முன்னர்  வெளியான, E.R. நரசிம்மையங்கார் அவர்களின் "உரையாசிரியர் ஒருவர், பேராசிரியர் பலர்" என்ற தொல்காப்பியம் தொடர்பான கட்டுரையை மீள்பார்வை செய்து மதிப்புரை அளிக்கிறார். ஒன்றை ஆராய முற்படுபவர், முதலில் அந்தக்  கோட்பாட்டை  எடுத்துக்காட்டு கொடுத்து விளக்கிய பிறகு, தனது கருதுகோளை சான்றுகளுடன் வைத்துச் சாதிப்பதே ஆய்விற்குரிய முறை, தனது விருப்பத்திற்கு முதன்மை கொடுப்பது சார்புநிலையில் அமைந்துவிடும்  என விளக்குகிறார். சீரிய ஆய்வுநெறிகளைப் பின்பற்றாத   நரசிம்மையங்கார் அவர்களின் ஆய்வு நேர்மையற்ற வகையில் அமைந்துள்ளதாகக் கருத்தும் தெரிவிக்கிறார். 
இக்கட்டுரையில் தனது கோணத்தை விளக்க மேலும் பல எடுத்துக் காட்டுகளைத் தருகின்றார்  ம.வி. இராகவன்.  இது ஒரு தொடர் கட்டுரை]

6. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment