Thursday, October 27, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 10

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 10
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 10

_________________________________________________________

1. கல்லாட நூலாராய்ச்சி (தொடர்ச்சி ...)
E.R. நரசிம்மஐயங்கார்
[எழுதிய ஆசிரியரால்  பெயர் பெற்ற நூல்களுள் ஒன்று 'கல்லாடம்', கல்லாடர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.  இப்பெயர் கொண்ட புலவர்  பலர் உள்ளனர்.   கல்லாடம் ஒரு கோவை நூல், சிவனின் 64 திருவிளையாடல்களில் 34னைக்  கொண்டு சிவன் புகழ் பாடும் நூல் இது. நம்பியாண்டார் நம்பியின் கருத்தை நிலைநாட்ட எழுந்த நூலென்ற கருத்து அடிப்படையில், அவர் வாழ்ந்த காலத்திற்குப் பின்னர், 11 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர்  கல்லாடம் எழுதப்பட்டது எனவும் கருதலாம் எனக் கூறும் நரசிம்மஐயங்கார் திருவிளையாடல் புராணக் கதைகளைக் குறித்து விரிவான தமிழிலக்கிய ஆராய்ச்சியை முன் வைக்கிறார்.

►► கட்டுரையின் இப்பகுதியில், தருமிக்குப் பொற்கிழி வழங்கிய கதை எவ்வாறு புலவர்களின் கற்பனையால் உருவாக்கப்பட்டது, நக்கீரர் என்ற புனைபெயரில் பாடல்கள் எழுதப்பட்டது, கொங்குதேர் வாழ்க்கை  என்ற பாடல் இக்கதையுடன் இணைக்கப்பட்டது என்பதையும்; பாண்டியன் உக்கிரப்பெருவழுதி குறித்தும் மூர்த்திநாயனார் குறித்தும் கூறும்  புராணக் கதைகள் யாவும் 8 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை எனச்  சான்றுகளுடன் விளக்குகிறார்.  இவற்றை எழுதிய  புலவர் கூறும் "நால்வகை இலக்கணம் நலத்தகு மொழிந்தனை"  என்ற இலக்கணக்குறிப்பானது  பாடல்கள் எழுதப்பட்ட காலத்தை  உறுதி செய்கிறது என்று நிறுவுகிறார் நரசிம்மஐயங்கார் ]

2. நற்றிணை  (தொடர்ச்சி ...)
ச. தண்டபாணி தேசிகன்
[ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நிலத்தின் இயல்பை விளக்கும் 'நற்றிணை' என்ற தொகை நூலின் பெயர்க்காரணம், நூலமைப்பு ஆகியவற்றை விளக்குகிறார்  தண்டபாணி தேசிகர். அகநானூறு, புறநானூறு, ஐந்குறுநூறு, குறுந்தொகை ஆகியவற்றின் கடவுள்வாழ்த்துப் பாடல்களில்  சிவனை வாழ்த்திப் பாடிய 'பாரதம் பாடிய பெருந்தேவனார்', நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடலை மட்டும் திருமாலை வாழ்த்துவதாக அமைத்ததன் காரணம் ஆராயப்படவேண்டிய ஒன்றாகக் கருதுகிறார்.

►► கட்டுரையின் இப்பகுதியில், நற்றிணை குறிக்கும் தாவரங்கள், விலங்குகள் குறித்தும், அவற்றின் பண்பென குறிக்கப்படுபவை குறித்தும் தொகுத்து வழங்குகிறார் ச. தண்டபாணி தேசிகன் ]

3. தமிழ்க் கவிச் சுவை
வி. குமாரசாமி ஐயர்
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், மதுரை மாவட்டத்தின் மேலூர் பகுதியில் வசித்த  தமிழ்ப்புலமை வாய்ந்த  தங்கப்புலவர் என்றழைக்கப்பட்ட இஸ்லாமியப் புலவர் ஒருவரைக்  குறித்த உண்மைக் கதை. இவரது புலமை பலரைக் கவர்ந்தது என்றும், மதுரைக்குச் சென்ற ஒரு வண்டிப்பயணத்தில் எவ்வாறு இப்புலவர் இலக்கிய விருந்தளித்து தன்னுடன் பயணம் செய்த பயணிகளை மகிழ்வித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.]

4. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
முத்து சு. மாணிக்கவாசக முதலியார்
[சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார்.  

►► கட்டுரையின் இப்பகுதியில், 'இரவுக்குறியும் மறுத்து தோழி வரைவு கடாவியது' என்பது  குறித்த  ‘‘யாயே, கண்ணினுங் கடுங்கா தலளே யெந்தையு’’(அகநானூறு - 12) என்ற கபிலர் பாடிய குறிஞ்சித் திணைப்பாடலுக்கு,  இக்கட்டுரையில் விளக்கம் தருகிறார்.   இது ஒரு தொடர் கட்டுரை]

5. திருவாசகத்தே ‘‘நமச் சிவாய வா அழ்க ’’ என்ற அகவல் பாவின் ஆய்வு
வே. மு. சீனிவாச முதலியார்
[ மாணிக்கவாசகர்  அருளிய திருவாசகத்தின்  "நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்ற பாடல் 'அகவற்பா' வகையில் (கலிவெண்பா அல்ல)  அடங்கும் எனக் குறிப்பிட்டு இப்பாடலின் சரியான பொருளைக் காணும் ஆய்வினைத் தொடங்குகிறார் வே. மு. சீனிவாச முதலியார் .  கோகழி என்பது திருக்காழியைக் குறிக்கும், திருப்பெருந்துறையை அல்ல என்றும் மிக விரிவான  பொருள் விளக்கம் தருகிறார்.  இந்த ஆய்வுக்கட்டுரை  ஒரு தொடர் கட்டுரை]

6. வள்ளல் அதியமான் நெடுமானஞ்சி  - நாடகம் (தொடர்ச்சி ...)
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[கடையேழு வள்ளல்களில் ஒருவனான அதியமானின் கதைக்கு நாடக வடிவம்  கொடுத்துள்ளார்  சிவ. குப்புசாமிப் பிள்ளை...நாடகம்  தொடர்கிறது ]

7. நூல் மதிப்புரை
இதழாசிரியர்
[சென்னைப் பல்கலைக்கழகத்தின்  வெளியீடான, திருநெல்வேலியில் வாழ்ந்த  கவிராயர் முத்துசாமிப்பிள்ளை  அவர்கள் இயற்றிய "நாநார்த்ததீபிகை" என்ற நிகண்டிற்கும்;
வருவாய்த்துறை அதிகாரியாகப் பணியாற்றிய  திருக்கோவலூர் K. கோதண்டபாணி பிள்ளை இயற்றிய "பங்கயச்செல்வி அல்லது வீரக்காதல்"    என்ற துன்பியல் நாடக நூலிற்கும்;
அண்ணாமலைப்பல்கலைக்கழகப் பேராசிரியரான நவநீதக்கிருஷ்ணன் அவர்களால்,  'பேடன் பௌவல்' எழுதிய 'ரோவரிங் டு சக்சஸ்' என்று சாரண இயக்கத்தைக் குறித்த ஆங்கில  நூல்,    தமிழில்  'திரிசாரணீயம்' என்று  மொழியாக்கம்  செய்யப்பட்ட நூலிற்கும் ;
மதிப்புரை வழங்கி  அவற்றைப்  படித்துப் பயன் பெறுமாறு வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment